விராலிமலை, ஜன.19: விராலிமலை அருகே வேலூர் ஊராட்சி அண்ணா நகர் குடியிருப்புவாசிகள் சிலருக்கு திடீரென ஏற்பட்ட வாந்தி, வயிற்றுப் போக்கால் மோகனஜோதி(6) என்ற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இந்நிலையில் சிறுமிக்கு ஈம காரியங்களை முடித்துவிட்டு அப்பகுதியே சோகத்தில் இருந்து மீள்வதற்குள் நேற்று உயிரிழந்த சிறுமியின் தந்தை கார்த்திக்(32), சகோதரர் பாரதி(7), சிட்டம்மாள், மாணிக்கம், அர்ஜூனன், பாலமுருகன், குணா, நல்லேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதனையடுத்து விராலிமலை அரசு மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற 5 பேர் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் கொடும்பாளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு வீடு வீடாக சென்று ரத்த மாதிரிகள் சேமிக்கப்பட்டு பரிசோதனை செய்தனர். அதோடு சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
இது குறித்து மருத்துவ குழுவினர் கூறியது: அப்பகுதியில் இயங்கி வரும் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையில் அமர்ந்த ஈ, எறும்பு, கொசு உள்ளிட்டவைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அவர்கள் உண்ணும் உணவில் கலந்திருக்கலாம். இதனால் உணவு விஷத்தன்மை அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.சிறுமி இறந்து மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.