சங்ககிரி: சங்ககிரி அருகே முனியப்பன்பாளையம் கோட்டபாளையத்தான் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(58). போஸ்ட் மாஸ்டரான இவரது மகன் கிருஷ்ணா(16). இவர், பிளஸ்1 படித்து வந்தார். சுப்பிரமணியம் வழக்கம்போல் நேற்று காலை 5 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது குளியறையில் சத்தம் கேட்டு ஓடி போய் பார்த்தார். அங்கு, வலது உள்ளங்கையில் தோல் உரிந்த நிலையில் கிருஷ்ணா சுய நினைவின்றி கிடந்துள்ளார். மேலும், அவரது கையில் குளிப்பதற்காக தண்ணீருக்குள் போடும் வாட்டர்கீட்டர் இருந்துள்ளது. வாட்டர்கீட்டரை போடும்போது மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. இதைப்பார்த்து பதறிய சுப்பிரமணியம் கிருஷ்ணாவை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்ககிரி எஸ்ஐ அப்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.