கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகமாக வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், பிராணவாயு உருளைகள், அனைத்து வகையான உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா தொற்று உள்ளவர்களை உள்நோயாளிகளாக அனுமதிக்க வேண்டும்.அதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றிற்கான தகவல் பலகைகள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியுமாறு ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.