கோவையில் மாணவர் கொலை: சடலத்தை வாங்க மறுத்து மறியல்

கோவை:  கோவை ஆலாந்துறை பகுதியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பிளஸ் 1 மாணவரை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். இந்த வழக்கில் முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இறந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு பள்ளி நிர்வாகம் சம்பவ நாளில் மாணவர் பள்ளிக்கு சென்ற விவரங்களை மறைத்து விட்டதாக தெரிகிறது.

பள்ளி நிர்வாகத்தை இந்த வழக்கில் தொடர்புபடுத்தாமல் இருப்பதற்காக வருகை பதிவேட்டில் மாணவர் பள்ளிக்கு வரவில்லை எனக்கூறி ‘ஆப்சென்ட்’ போட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி நேற்று அரசு மருத்துவமனை முன் உள்ள ரோட்டில் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இறந்த மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஊஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சடலத்தை பெற்று சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: