கிருஷ்ணராயபுரம், ஜன. 12: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மஞ்சமேடு மணி நகரில் சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் கடந்த 10 ஆண்டுகளாக இல்லை என கூறி கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று குடியேறும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவடிவேல், மாயனூர் போலீஸ் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதால் தற்செயலாக போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், கண்ணதாசன் மற்றும் மஞ்சமேடு மணி நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.