தூத்துக்குடி ரேஷன் கடைகளில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி, ஜன.11: தூத்துக்குடி மாநகர ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு  தொகுப்பு விநியோகம் மாநிலம் முழுவதும் துவங்கி நடந்துவருகிறது.  இந்நிலையில், ஒரு சில ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில்  பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு அதிகாரிகளுடன் நேற்று சென்ற அமைச்சர்  கீதாஜீவன், குடும்ப அட்டைதாரர்களுக்கு உண்மையிலேயே பொங்கல் பரிசு தொகுப்பு சரியான முறையில் 21 பொருட்களுடன்  வழங்கப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 தூத்துக்குடி கால்டுவெல் காலனி, செல் சீனி காலனி, தபால் தந்தி  காலனி, அசோக் நகர், செல்வநாயகபுரம், மதுரா கோட்ஸ் ஸ்டோர், சென்ட்ரல் ஸ்டோர்  ஆகிய ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் அனைத்து  கார்டுதாரர்களுக்கும் சரியான முறையில் பொருட்கள் வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் கடைகளில் நின்றிருந்த பொதுமக்களிடம் அரசு  அறிவித்துள்ளபடி 21 பொருட்களும் உள்ளதா? என்பதை சரிபார்த்து வாங்கி  செல்லவேண்டும் என்றும், இதில் குறைகள் ஏதும் இருப்பின் உடனடியாக  தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் ரேஷன் கடை  பணியாளர்களிடம், ரேஷன் கடைகளில் கூட்டம் சேராத வகையில் பொதுமக்களுக்கு  டோக்கன் கொடுத்து பொதுமக்களை நீண்டநேரம் காக்க வைக்காத வகையில் பொருட்களை  வழங்க வேண்டும். 21 பொருட்களும் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்து  எந்தவிதமான குறைகளுக்கும் உள்ளாகமல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்’’ என்றார். ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், தூத்துக்குடி வட்ட வழங்கல் அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: