ஆண்டிமடம், ஜன.11: ஆண்டிமடம் அருகே முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண்சடலம் மீட்கப்பட்டது. யார் அவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிவலிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் முந்திரி தோப்பில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது, ஆடு மேய்க்க சென்றவர்கள் ஏதேனும் விலங்குகள் இறந்து கிடக்கும் என இருந்துள்ளனர். துர்நாற்றம் அதிகரித்ததால், நாற்றம் அடித்த இடத்தை நோக்கிச் சென்று பார்த்த போது முந்திரி மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அடையாள தெரியாத ஆண் சடலத்தை மரத்திலிருந்து இறக்கி விசாரணை மேற்கொண்டனர். இதில் தூக்கில் தொங்கியவருக்கு 40 வயதுக்குமேல் இருக்குமெனவும், அவர் அணிந்திருந்த வேஷ்டியை மரத்தில் சுருக்குப் போட்டு தொங்கிய நிலையிலும், முக கவசம் அணிந்த நிலையிலும் இருந்துள்ளார்.