கரூர், ஜன. 11: கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டுச் சென்றனர். கொரனோ பரவல் காரணமாக தமிழகம் முழுதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக, தற்காலிகமாக கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நாட்களில் நடந்து வந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே போன்று ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது, மக்கள், தங்களின் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர். அப்போது, மனுக்கள் பெறப்படும் பெட்டி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த முறை, கலெக்டர் அலுவலகத்தில் பிரதான நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை போட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.