ஆரணி, ஜன.11: ஆரணி அருகே வீட்டில் புகுந்து திருட முயன்ற ஜட்டி ஆசாமியை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து தர்மஅடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமம் நத்தம் ஒட்டவடை தெருவில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் திருட வீட்டில் எகிறி குதித்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். உடனே, மர்ம ஆசாமி தப்பி ஓட முயன்றார். அதற்குள், பொதுமக்கள் மர்ம ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிடிபட்ட மர்ம ஆசாமி ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு, உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டு, கையில் க்ளவுஸ் அணிந்து அணிந்திருந்தார். இதனால் மர்ம நபர் கை, கால்களை கட்டி போட்ட பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். அப்போது, மர்ம ஆசாமி வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த சட்டை, பேனா கத்தி, கிளவுஸ் உள்ளிட்ட பொருட்களை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.