ஆரணி, ஜன.11: ஆரணி சூரிய குளம் பகுதியில் வீட்டை சுற்றி கழிவுநீர் தேங்கியதால் இறந்தவர் சடலத்தை உறவினர் வீட்டுக்கு தூக்கி சென்றனர். அங்கு புதிய கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், பக்கா கால்வாய்கள் பழுதடைந்து விட்டதால், கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க வில்லையாம். இந்நிலையில், ஆரணி டவுன் சூரியகுளம் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யர் தெருவில் மோகன் (55) என்பவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால், அவரது சடலத்தை அஞ்சலிக்காக வீட்டின் வெளியே வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் வீடுகளை சுற்றிலும் அந்த தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியதால், உறவினர்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை.