ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் இழந்ததால் வாலிபர் தற்கொலை

அண்ணாநகர்: கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் தினேஷ் (38). அதே பகுதியில் இணையதள சேவை மையம் நடத்தி வந்தார். இவருக்கு நளினி (33) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார். மேலும், தனது மனைவியின் நகைகளையும் அடமானம் வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்துள்ளார்.

தொடர்ந்து குடும்பம் மற்றும் தொழில் செய்ய பணம் இல்லாததால் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

அதன்படி இதுவரை ரூ.5 லட்சம் வரை தினேஷ் தனது பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை செய்துள்ளனர். ஆனால், கடனை திருப்பி தர முடியாத தினேஷ், இழந்த பணம் மற்றும் கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில், நேற்று தனது வீட்டில் தினேஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து மனைவி, குழந்தைகள் கதறி துடித்தனர். தகவலறிந்த கோயம்பேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தினேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: