ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ்: பொதுமக்கள் சாலை மறியல்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 20 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற வேண்டுமென, கடந்த ஆண்டு வருவாய் துறைக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வருவாய் துறை அதிகாரிகள், மேற்கண்ட பகுதிகளில்  வீடுகளை காலி செய்யும்படி பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் அதிகாரிகள், நேற்று காலை மீண்டும் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் வந்து, நோட்டீஸ் வழங்கும் பணியை தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெத்தேல் நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுவீடாக சென்று, நோட்டீஸை ஓட்டினர். தகவலறிந்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊரில் இல்லை. அதனால், அவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளேன், என்றார். ஆனால், அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், வீடுகளை அகற்ற மாட்டோம் என அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உறுதி அளிக்க வேண்டும் எனக்கூறி தொடர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: