சென்னை: புதிதாக தொடங்கப்பட்ட தாம்பரம் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட, செம்மஞ்சேரி சுனாமி நகரில் வசித்த அர்னால்டு சாமுவேல் என்பவருக்கும், பாபுகான் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜூலை 13ம் தேதி செம்மஞ்சேரி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த அர்னால்டு சாமுவேல் என்பவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில், அன்றே பாபுகான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 7ம் தேதி தான் பாபுகான் ஜாமீனில் வெளியில் வந்தார். நேற்று அர்னல்டு சாமுவேலை பாபுகான் கொலை செய்ய திட்டம் தீட்டி, பதுங்கி இருப்பதாக தாம்பரம் கமிஷனர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், செம்மஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு படையினர் ரகசியமாக கண்காணித்து நேற்று இரவு பாபுகானை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் முன்னெச்சரிக்கையாக பாபுகானை கைது செய்ததால், ஒருவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதனால், தனிப்படை போலீசாரை கமிஷனர் ரவி பாராட்டினார்.