திருவள்ளூர்: பள்ளிகளின் தூய்மை பணிக்காக மாணவர்கள் நலன்கருதி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சுழற்சி முறையில் தினமும் பயன்படுத்தினால் பள்ளி வளாகம் மேம்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.
கொரோனா மற்றும் தொடர்மழை காரணமாக அனைத்துவகை அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்த சிரமங்கள் உள்ளன. பல பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லை. அதனால், பள்ளிகளின் தூய்மை பணிக்காகவும், மாணவர்கள் நலன்கருதி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சுழற்சி முறையில் தினமும் பயன்படுத்தினால் பள்ளி வளாகம் மேம்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து உதவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அவருடன் சங்க நிர்வாகிகள் வே.ரேவதி, எஸ்.கந்தசாமி, எம்.ஜான்சன், வி.எம்.சுகுணா உள்பட பலர் இருந்தனர்.