வாலாஜாபாத்: வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில் சிதலமடைந்த தரைபாலம் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் செல்லும் கிராம மக்கள் போதிய தற்காலிக மின் விளக்குகள் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் கிராமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாலாஜாபாத் - அவளூர் கிராமத்தை இணைக்கும் தரைப்பாலம், பாலாற்று படுகையில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் கன்னடியன் குடிசை, இளையனார் வேலூர், தம்மனூர், ஆசூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாலாஜாபாத் வந்து, அங்கிருந்து பெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம் உள்பட பல பகுதிகளுக்கு அரசு மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். கடந்த மாதம் வாலாஜாபாத் பாலாற்று படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தின் மையப்பகுதியில் சிதிலமடைந்தது.
இதனால், இந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது தரைப்பாலத்தின் ராட்சத பைப்புகள், மண் மூட்டைகள் அமைத்து, அப்பகுதியில் மண் கொட்டி கார், பைக், மினி லாரி ஆட்டோ ஆகியவை மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிதலமடைந்த தரைபாலம் பகுதியில் குறுகிய சாலையாக உள்ளதால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த தரைப்பாலத்தில் தற்காலிக மின் விளக்குகள் அமைத்து பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.