திருவொற்றியூர்: இந்திய அளவில் சிறுவர், சிறுமியருக்கான (சப்-ஜூனியர்) பூப்பந்தாட்ட பட்டைய போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிரிகாகுளம் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. அனைத்து மாநிலங்களில் இருந்து 650 பேர் பங்கேற்கும் போட்டியில் தமிழகத்தில் இருந்து 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 3 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த 2ம் தேதி முதல் பயிற்சி முகாம் திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதன் நிறைவு நாளில் கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற வாழ்த்தி நிதி உதவியும், இரண்டு நலிவுற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.