விழுப்புரம், ஜன. 9:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரியஅகரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர் அண்மையில் எஸ்பி நாதாவிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில், கடந்த 2006ம் ஆண்டு திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தைச் சேர்ந்த பாலு(58) என்பவர் எனக்கு அறிமுகமானார். தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், குறைந்த விலையில் இடம் வாங்கித் தருவதாகவும் கூறினார்.அதனடிப்படையில் அச்சரப்பாக்கம் அருகே விளவங்காடு கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், ஒரு ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும், பத்திரப்பதிவு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சம் என்று கூறினார். அதனை நம்பி பல தவணைகளாக அவர் கேட்ட ரூ.70 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர் போலி ஆவணங்களை காண்பித்து நிலம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டார்.