சின்னசேலம், ஜன. 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், கல்வராயன்மலை அடிவார பகுதியில் உள்ள விளை நிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி மரவள்ளி பயிரிட்டுள்ள வயலை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது வயலில் 2 மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரபாண்டியன், நாகேஸ்வரன், கழகமணி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 7 அடி நீளமுள்ள 2 மலை பாம்புகளையும் பிடித்து கச்சிராயபாளையம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவிந்தராசு, சின்னதுரை உள்ளிட்டோர் அவைகளை எடுத்து சென்று பரிகம் வனப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர். விளை நிலத்தில் மலைப்பாம்புகள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.