திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

திருவள்ளூர்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வெங்கத்தூர் மற்றும் மேல்நல்லாத்தூர் ஊராட்சிகளை ஒட்டிய எல்லையில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள், அதிரடியாக அகற்றினர்.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வெங்கத்தூர் மற்றும் மேல்நல்லாத்தூர் ஊராட்சிகளை ஒட்டிய எல்லையில் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து வணிக வளாகங்கள், ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையொட்டி, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை மேற்கள்ள முடியாமலும், மழை காலங்களில் தண்ணீர் குடியிருப்புக்களில் புகாமலும் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் அப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 15 நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஷ்னவிஸ் பெர்னாண்டோ, டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் ஜெயமூர்த்தி, ராஜ்கமல் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை அப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு, பொக்லைன் வாகனம் மூலம் வணிக வளாகத்தை இடித்து அகற்றினர். பின்னர், வீடுகள் முன்பு ஆக்கிரமித்து இருந்த குடிசைகளை அகற்ற அதிகாரிகள் முயன்றனர். அப்போது, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வ.பாலயோகி, மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நா.வெங்கடேசன், பா.யோகநாதன் ஆகியோர் பொங்கல் பண்டிகை வரை அவகாசம் வழங்கும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குடிசைகளை மட்டும் விட்டு, விட்டு மற்ற வணிக வளாகங்களை இடித்து அகற்றினர்.

Related Stories: