செய்யாறு, ஜன.8: செய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வாலிபர் கடத்தியதாக தாய் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் இளம்பெண் மற்றும் வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவுக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை இளம்பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்துள்ளனர். அப்போது இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
இதையடுத்து வேலை முடித்துவிட்டு, பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த மகளை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கம் உள்ள உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் தூசி போலீசில் நேற்று அளித்த புகாரில், ‘ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம்(26), என்பவர் எனது கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.