உடுமலை, ஜன. 8: விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைக் கூட்டத்தை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டியடித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சின்னக்குமாரபாளையம் பகுதியை ஒட்டி கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் யானைக்கூட்டம் ஒன்று முகாமிட்டிருந்தன. அவை அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து சப்போட்டா, தென்னை உள்ளிட்ட பயிர்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தின. விவசாயிகள் மூலம் இத்தகவலறிந்த உடுமலை வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் வனவர் சுப்பையா உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவயிடம் விரைந்து வந்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டினர். ஏழுமலையான் கோயிலை ஒட்டிய வனப்பகுதி வரை யானைக் கூட்டத்தை பின் தொடர்ந்து சென்று வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.