ஈரோடு,ஜன.8: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் மாநகரில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது கரும்பு. இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி, கவுந்தப்பாடி, பவானி, கொடுமுடி மற்றும் சமயசங்கிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள், பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த கரும்புகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து, ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் சாலையோர கடைகள் அமைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.