திருச்சி, ஜன.7: சமுதாய சொத்துக்களை திட்டமிட்டு உருவாக்குவதற்கும், நிதி அளிப்பதற்கும் அவற்றின் நிலைப்புத்தன்மைகளை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானதாகும். பொதுமக்கள் சுயசார்புத் தன்மையை ஊக்குவிப்பதற்கும், மேன்மைப்படுத்துவதற்கும், சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி பராமரிப்பதில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்து அதன்மூலம் சமூக தேவைகளை நிறைவேற்றுவதற்கும், பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சமுதாயத்தின் தேவைகள் பூர்த்தி அடைவதற்கு நமக்கு நாமே திட்டம் வழி வகை செய்கிறது. இத்திட்டத்தில் பொதுமக்கள் பங்கு தொகையாக மூன்றில் ஒரு பங்கும், அரசு பங்கு தொகையாக இரண்டு பங்கும் சேர்த்து பணிகள் மேற்கொள்ளலாம். 2021-22ம் ஆண்டு ஊரக பகுதிகளுக்கு மட்டும் நமக்கு நாமே திட்ட பணிகளுக்காக மாநில அரசு பங்கு தொகையாக ரூ.2.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் மூலம் தங்கள் குடியிருப்பு பகுதி மற்றும் கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.