பரிசலில் சென்று மீன் பிடிக்கும் தம்பதி சுங்க சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்காமல் மெத்தனம்

கரூர், ஜன. 7: தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும், கரூர் மாவட்டத்தில் சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததது குறித்து உரிய விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பகுதியில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

இதனால், அந்த பகுதிகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து மாவட்ட அளவில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழுவின் பல கூட்டங்களில் குழுவின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான பிரபு சங்கர், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதாதைகள் வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

ஆனால், அனுமதி பெற்ற சாலைகளில் கட்டணம் வசூலித்து வரும் நிறுவனங்கள் இதுநாள் வரை சாலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விளக்கத்தினை 10 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளருக்கு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், 10 நாட்களுக்குள் பதில் அளிக்க தவறினால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச் சாவடியை ரத்து செய்யவும் ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: