தாமிபரணி ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகளை உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்க வேண்டும்

நாகர்கோவில், ஜன.7:  பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து, உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் கூறியதாவது: பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக்கோட்டம், நெடுஞ்சாலைதுறை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் மற்றும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, பழுதடைந்த சாலைகளை செப்பனியிடும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற   அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிடும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திடவேண்டும்.

மலைவாழ் பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்ட பணிகளை பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் ஆகியோர் வனத்துறையினருடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்திடவேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பெருக்கினால் ஏற்பட்ட கால்வாய் உடைப்புகள், பழுதடைந்த நீர்நிலைகள் மற்றும் சாலைகளை பழுது நீக்கி சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக வன சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளுக்கு வன அலுவலர் அனுமதியோடு, இணைந்து செயல்பட வேண்டும்.  தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள கிணறுகளின் எண்ணிக்கையினை கணக்கெடுத்து அவற்றை அந்தந்த பகுதிகளிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பராமரிக்கும்படி துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இப்பணிகள் மேற்கொள்ளும்போது ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர்இளையராஜா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்டஇயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி உட்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.

Related Stories: