கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூர் அரசு ஐடிஐயில் தையல் மற்றும் பின்னலாடை குறுகிய கால பயற்சி தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் மகளிர் அதிகளவில் பயனடையலாம். காலியாக உள்ள 40 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் சேர விரும்புவோர், 18 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடித்த, பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவரும் பயன் பெறலாம். அனைவருக்கும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். மூன்று மாத கால பயிற்சி முடித்தவுடன் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.