காரிமங்கலம், ஜன.3: காரிமங்கலம் ஒன்றியம், கும்பாரஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொள்ளுப்பட்டி கிராமத்தில், மயான பகுதியை அளவீடு செய்ய வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில், காரிமங்கலம் தாலுகா சர்வேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கடந்த பல மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்த நிலையில், நேற்று அரசு விடுமுறை நாளில், கும்பாரஅள்ளி பஞ்சாயத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை சம்பந்தப்பட்ட சர்வேயர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் கவுரி திருக்குமரன் கூறுகையில், ‘2 மாதத்திற்கு முன்பே கொள்ளுப்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு அளவீடு செய்ய மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் விடுமுறை நாளில், தனியாருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்த சர்வேயர் மீது, அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.