விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.6.75 கோடி அபராதம் திண்டுக்கல் போலீசார் அதிரடி

திண்டுக்கல், ஜன. 3: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கடந்த 2021ல் 86 ரவுடிகள், 12 பாலியல் குற்றவாளிகள் 10 கொள்ளையர்கள், 17 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2,554 பேர் மீது குற்ற விசாரணை முறைச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 1,800 பேர் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது. அதை மீறி குற்றத்தில் ஈடுபட்ட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சாலை விதிகளை மீறிய 8 லட்சத்து 99 ஆயிரத்து 78 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. அதில் மது போதையில் வாகனம் ஓட்டிய 732 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 4 லட்சத்து 61 ஆயிரத்து 128 பேர் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறிய 2 லட்சத்து 97 ஆயிரத்து 490 வாகனங்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 226 கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் மூலம் 894 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 833 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.80 லட்சத்து 87 ஆயிரத்து 927 மதிப்பில் 8 டன் 732 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர மாவட்டம் முழுவதும் காணாமல் போன 298 பேரில் 274 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி மணல் அள்ளிய 254 பேர் கைது செய்யப்பட்டனர். எனவே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: