ஈரோடு, ஜன. 3: திருப்பத்தூர் மாவட்டம் கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி(58). இவர் ஈரோடு வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியில் சாயப்பட்டறை உரிமையாளருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து, அங்கேயே தங்கி காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, கருப்புசாமி நேற்று முன்தினம் மாலை அவர் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே காலி இடத்தில் பாத்திரம் கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருக்கு அருகே இருந்த முள் முருங்கை மரம் திடீரென முறிந்து, பாத்திரம் கழுவி கொண்டிருந்த கருப்புசாமி மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே கருப்புசாமி உயிரிழந்தார்.