நாமக்கல், டிச. 28: குவைத் நாட்டில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு, பெண் பணியாளர்களை பணியமர்த்த, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தற்போது குவைத் நாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
குவைத் நாட்டில் வீட்டுவேலை செய்ய 500 பெண்கள் தேவைப்படுகிறார்கள். வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்களுக்கு, மாத ஊதியம் ₹32 ஆயிரம் அளிக்கப்படும். அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ₹29,500 வழங்கப்படும். வயது 30 முதல் 40க்குள் இருக்கவேண்டும்.
மேலும், மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள், குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், தங்களது சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன், நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04286 222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.