சேந்தமங்கலம், டிச.23: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு உதவி அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கலந்து கொண்டு பிளஸ் 2 மாணவிகள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம், அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளுதல், வேலைவாய்ப்பு சம்பந்தமான தேர்வுகளில் தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு, அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வுகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.