தர்மபுரி, டிச.9: அதியமான்கோட்டை அருகே போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா கடத்திய 2பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் 2.5கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அதியமான்கோட்டை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில், அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் எஸ்.ஐ.ராஜேஷ் மற்றும் போலீசார் ஒட்டப்பட்டி சந்திப்பு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பையில், 2.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் தர்மபுரி கலெக்ட்ரேட் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சூர்யா (25), அதகப்பாடி குயிலன்கொட்டாய் பகுதியை சேர்ந்த கேசவன் (65) என்பது தெரியவந்தது. இருவரையும் தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.