திருச்சி, டிச. 9: பாரதிதாசன் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திருச்சி வந்தார்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று (9ம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து 2,224 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து உரையாற்றுகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்தி பேசுகிறார். இதில் புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக (ெபா) தலைவர் கனகசபாபதி சிறப்புரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். அவரை கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பாரதிதாசன் பல்கலை. வளாகம் சென்று தங்கினார்.தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் கவர்னர், பின்னர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். தமிழக கவர்னர் திருச்சியில் 2 நாள் தங்குவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.