ரிஸ்கி ஏற்றுமதியாளர்கள் 100 பேரின் பிரச்னைக்கு தீர்வு

திருப்பூர், டிச.9: கடந்த 3 மாதத்தில் ரிஸ்கி ஏற்றுமதியாளர்கள் 100 பேரின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என திருப்பூரில் சரக்கு சேவை வரித்துறை முதன்மை கமிஷனர் குமார் பேசினார். கோவை மத்திய கலால் மற்றும் சரக்கு, சேவை வரித்துறை சார்பில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கி பேசினார். கோவை மத்திய கலால் மற்றும் சரக்கு, சேவை வரித்துறை இணை கமிஷனர் விஜய கிருஷ்ணவேலன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதன்மை கமிஷனர் குமார் பேசுகையில், அரசு வழங்கும் சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் சரியாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளை தடுக்க வரித்துறையால் சரிபார்ப்பு பணிகள் செய்யப்படுகிறது. அப்போது சில நேரங்களில் நேர்மையாக ஏற்றுமதியாளர்களும் சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களும் ரீபண்ட் தொகைகளை தவறாக பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட (ரிஸ்கி ஏற்றுமதியாளர்கள்) பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.

ஏற்றுமதியாளர்களின் பிரச்னைகள் குறித்து பலரும் தெரிவித்து வருகிறார்கள். இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 3 மாதத்தில் மட்டும் 100 ரிஸ்கி ஏற்றுமதியாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கன்டெய்னர் பற்றாக்குறை, நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் காரணமாக தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இருப்பினும் எந்த ஒரு இடையூறு ஏற்பட்டாலும், அதனை சமாளித்து வெற்றியும் பெறுகிறார்கள். ஏற்றுமதியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் திருப்பூர் மண்டல துணை கமிஷனர் சித்தார்த்தன் நன்றி கூறினார். இதில் சைமா சங்க தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் முத்துராமன், சிம்கா சங்க தலைவர் விவேகானந்தன், ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் செந்தில்குமார், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி, டெக்பா சங்கத்தை தலைவர் காந்த் மற்றும் தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: