பாறை இடுக்கில் சிக்கிய தொழிலாளி சடலம் மீட்பு

மஞ்சூர், டிச.9: மஞ்சூர் அருகே தாய்சோலா பகுதியில் உள்ள அருவி அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அருவியின் ஒரு புறம் பாறை இடுக்கில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் கொடுத்ததை தொடர்ந்து மஞ்சூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து ஊட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியோடு பாறை இடுக்கில் இருந்து உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரனையில் இறந்தவரின் பெயர் மாதன் (48) என்றும், தாய்சோலா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் அதன்பின் வீடு திரும்பாத நிலையில் நேற்று காலை அங்குள்ள அருவியின் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து மாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்ததுடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: