மொடக்குறிச்சி அருகே வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

மொடக்குறிச்சி, டிச.9:   மொடக்குறிச்சி அருகே வேன் நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்த ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கு சொந்தமான வேஷ்டி, லுங்கிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலையில் இருந்து ஈரோடு- கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சின்னியம்பாளையம் பகுதிக்கு சாயம் ஏற்றப்பட்ட லுங்கிகளை உலர வைக்க வேனில் நேற்று காலை எடுத்துச் சென்றனர். சோலார் அடுத்த போக்குவரத்து நகர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் ஏற்றி வந்த லுங்கிகள் சாலையில் சிதறின.

விபத்தில் வேன் டிரைவர் ஈரோடு கருங்கல்பாளையம் கஜேந்திரன் (35), சாயப்பட்டறை தொழிலாளி அஜீத் (27) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கிரேன் மூலம் வேன் அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: