நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், அதுபற்றி புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. நீர்நிலை புறம்போக்கு ஏரி, ஏரிக்கரை, குளம், குட்டை, நீர்பிடி, ஓடை ஊரணி, கால்வாய், ஏந்தல், ஆறு, தாங்கல், வாய்க்கால், கிணறு மற்றும் இதர நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்கவும், புதிய ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அதனை தடுத்து நிறுத்த வட்டாட்சியர் உள்பட அலுவலர்கள் அந்தந்த கிராம அளவில் ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அலுவலர்கள் பாசன உதவியாளர், நீர்வள ஆதாரத்துறை, சமூக ஆர்வலர், தன்னார்வலர்கள், முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோரை வட்டாட்சியரால் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவினர், நீர்நிலை புறம்போக்குகளில் புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணித்து, அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதன் விவரத்தை உடனடியாக வட்டாட்சியர் உள்பட தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கிராம அளவிலான ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் பணிகளை அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை). காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கொண்டு வட்ட அளவில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் புதிய ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2723 7107, 044 2723 7207, 93454 40662 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: