ஏலச்சீட்டு நடத்தி ரூ.53.75 லட்சம் மோசடி தந்தை, மகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் நாகலூத்துமேடு, மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (64). முன்னாள் நகரமன்ற உறுப்பினர். இவரது மகன் சதீஷ் (43). கடந்த  2012ம் ஆண்டு சுப்பிரமணியன், தனது மகனுடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தினார். இதற்காக, அரசு அனுமதி பெறவில்லை. இந்த ஏலச்சீட்டில் பலர் தவணை முறையில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்தவேளையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த காதர்கான் என்பவருக்கு கொடுக்க வேண்டிய ஏலச் சீட்டு பணம் 5 லட்சம் மற்றும் கடன் கொடுத்த ரூ.3 லட்சம், சதீஷ், கௌதம், கங்காதேவி, கார்த்திகேயன், சௌந்தர்ராஜ், யுவராஜ், பாஸ்கர், மகேஷ், சிவக்குமார் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய சீட்டு பணம் என மொத்தம் 9 பேருக்கு ரூ.53.75 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஏலச்சீட்டி நடத்தி தந்தை, மகன் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோர் மீது மோசடி செய்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீசார் அளித்த ஆவணங்களில் மோசடி குறித்து உறுதி செய்யப்பட்டதால் சுப்பிரமணியன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: