கரூர், டிச. 9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகர்ப்பகுதியில் குளம் போல தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகரப்பகுதிகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கரூர் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் அதிகளவு மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. சில பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ஜெனரேட்டர் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் தாந்தோணிமலை குறிஞ்சி நகர்ப்பகுதியின் பின்புற பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இதனால், கொசுக்கள் உற்பத்தி போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் இதனை அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிஞ்சி நகர்ப்பகுதியை சுற்றிலும் சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.