மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பிற்கு 40% மானியம்

மயிலாடுதுறை, டிச.9: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகப்படுத்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா தகவல்.மயிலாடுதுறை மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகப்படுத்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசினால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

தேசிய வேளாண் அபிவிருத்திட்டம் 2021-22ன் கீழ் பண்ணைக் குட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்திட பாலித்தீன் உறைகளிட்டு மீன்வளர்த்தல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினம் உள்பட மொத்தம் ரூ.1,87,500ல் 40% மானியமாக ரூ.75,000 வழங்கப்படும். விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் விரால் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினம் உள்பட மொத்தம் ரூ.75000 ல் 40% மானியமாக ரூ.30,000 வழங்கப்படும்.

பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை ஊக்குவித்தல் திட்டத்தில் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினம் உள்பட மொத்தம் ரூ.62,500 ல் 40% மானியமாக ரூ.25,000 வழங்கப்படும்.பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன்வளர்ப்பு குளம் அமைத்தல் திட்டத்திற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.7,00,000- ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ.2,80,000- மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60மூ மானியம் ரூ.4,20,000- மானியமாக வழங்கிட ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் மொத்த உள்ளீட்டு செலவினத்தொகை ரூ. 4,00,000- ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ.1,60,000- மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியம் ரூ.2,40,000 மானியமாக வழங்கிட ஆணை பெறப்பட்டுள்ளது.

மேற்படி திட்டங்களில் மானியத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும், முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.எனவே இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் எண்.41யு தென்பாதி மெயின் ரோடு, பெஸ்ட் பள்ளி வளாகம் எதிரில், சீர்காழி என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகப்பட்டினம் (வடக்கு), சீர்காழி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: