தேவகோட்டை, டிச.8: பள்ளி எதிரில் செப்டிக் டேங் கழிவுகளை கொட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவகோட்டை அரசு மருத்துவமனை குடியிருப்பு எதிராக 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் நேர் எதிரில் நான்கு வார்டுகளில் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை குவித்து பின்னர் அள்ளிச்செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு தனியார் செப்டிக் டேங்க் வைத்திருப்பவர்கள் கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டிச்சென்றனர். நேற்று காலை அந்த பகுதி முழுவதும்
துர்நாற்றம் வீசியது. அண்ணாநகர், ஜீவாநகர் பகுதி மக்கள் பள்ளி முன்பாக கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முற்றுகையிட்டனர்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் காமராஜ் கூறுகையில், பள்ளியின் முன்பாக மனசாட்சி இன்றி செப்டிக் டேங் கழிவுகளை கொட்டிச்சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.