விருதுநகர், டிச. 8: விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மனநலம் காப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகிக்க, செயலாளர் டாக்டர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி பேசுகையில், ‘மாணவர்கள் தங்களுக்கு தாங்களே நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை விட்டு நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். மூளையில் உள்ள நூறு கோடி நரம்புகள் உடல் உறுப்புகளை இயக்க பயன்படுவது போல் வாழ்வில் ஒவ்வொருவரும் நல்லவராக உருவாக நல்லனவற்றை கற்க வேண்டும்’ என்றார். இதில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், நகர பண்பாட்டு கழக செயலாளர் டாக்டர் சங்கரலிங்கனார், ஆய்வாளர் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.