ஊட்டி, டிச.8: தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டது. 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு தினமும் 1 முதல் ஒன்றரை மணி நேரம் கற்றல் திறமையை மேம்படுத்தும் வகுப்புகள் நடத்த இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1518 கிராமங்களில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஊட்டி வட்டாரத்தில் 19 இடங்களில் முதல் கட்டமாக தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முதல் 35 இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் வகுப்புகள் துவங்கின. இந்நிலையில், 3வது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.