திருமுருகன்பூண்டி, டிச. 8: சேறும் சதியுமாக மாறிய சாலையை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் சாலையில் நேற்று மரக்கன்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், நெருப்பெரிச்சல், தோட்டத்துபாளையம் பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் இருக்கிறது. அவ்வப்போது போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்போதெல்லாம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த சாலையில் பலர் இரு சக்கர வாகனங்களில் சென்ற போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் பழுதான அனைத்து சாலைகளை செப்பனிடவும், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் சாலையில் நேற்று மரக்கன்று நடப்பட்டு போராட்டம் நடந்தது.