கண்ணமங்கலம், டிச.8: வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்ைடயில் நேற்று கொடி நாளையொட்டி முப்படை வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இளைஞர்கள் பிரமாண்டமான தேசிய கொடிகளை கையில் ஏந்தினர். இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அதிக ராணுவ வீரர்கள் வசிக்கும் கிராமமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை இருக்கிறது. இங்கு ராணுவத்தில் நடைபெறுவது போலவே நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி கொடி நாளான நேற்று கிராமத்தின் மையத்தில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி இளைஞர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அருகில் உள்ள சக்தி மலையின் உச்சிக்கு இளைஞர்கள் சென்றனர். அங்கு முன்னாள் ராணுவ வீரர் எல்.ஏழுமலை தலைமையில் 30 அடி அகலம், 20 அடி உயரம் கொண்ட இரண்டு பிரமாண்டமான தேசிய கொடிகளை பிடித்தபடி போரில் வீரமரணமடைந்த முப்படை வீரர்களுக்கு வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தினார்கள்.