மன்னார்குடி, டிச. 8: மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 42 வேகன்களில் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு ஊர்களில் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட நெல்மணிகள் மாவட்டத்தில் அரசால் அங்கீரிக்கப்பட்ட அரவை மில்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் மன்னார்குடி ரயில்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி சரக்கு ரயில் பெட்டி களில் ஏற்றினர். பின்னர் 42 வேகன்களில் ஏற்ற ப்பட்ட 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சென்னை கொருக்குப் பேட்டைக்கு அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப் பட்டது. இப்பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.