வேலாயுதம்பாளையம், டிச.8: வேலாயுதம்பாளையம் அருகே செவ்வந்திபாளையத்தில் மண்வள தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் சார்பாக உலக மண் வள நாளை முன்னிட்டு உறுதிமொழியை ஏற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வந்திபாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் செயல்அலுவலர் துரைராஜ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு மண்வள தினம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியின் போது மண் வளம் காப்போம், மனித இனம் காப்போம், உற்பத்தித்திறனை பெருக்குவோம், நச்சுத்தன்மையை ஒழிப்போம், நலமான வாழ்விற்கு அடித்தளம் அமைப்போம், ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்ப்போம், இயற்கை உரம் இட்டு மண் வளத்தை காக்க வேண்டும், பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதை தவிர்க்கவேண்டும், பூமித் தாயைக் காக்க வேண்டும், மண்ணின் உப்பு தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேற்கண்ட நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட செயலர் கனகராஜ் செய்தார்.