திருப்போரூர்: பாதாள சாக்கடை பணி மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளால், திருப்போரூர் பகுதி தூசி மண்டலமாக மாறிவிட்டது. இதனை, உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. குறிப்பாக, நான்கு மாடவீதிகள், பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில் தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டி, குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. அதில், திருப்போரூர் ரவுண்டானா முதல் இள்ளலூர் சந்திப்பு வரை பழைய மாமல்லபுரம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை.மேலும், கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையின் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலை அதிகமாக சேதமடைந்துள்ளது. நாவலூர், படூர், தையூர், கேளம்பாக்கம், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், இள்ளலூர் சந்திப்பு பகுதிகளில் பிரமாண்ட பள்ளங்கள் சாலையில் உருவாகிவிட்டன. சாலையில் வெள்ளநீர் சென்றதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது.