வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சியில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில், ஒழையூர் - தென்னேரி சாலை பிரதான சாலையாக உள்ளது. இங்கு பொதுமக்கள் வசதிக்காக, பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடை, தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரை முழுவதும் ஆங்காங்கே சிதலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனை அகற்றிவிட்டு, புதிதாக பஸ் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.