சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் 61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:சட்டமன்ற பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், 8 மாநகராட்சி பள்ளிகளில் 21.77 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே, 6 பள்ளிகளில் 17.38 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.